Monday, June 21, 2010

தலைமுறை இடைவெளி (Generation Gap)

என் சிறு வயதில், என்னை விட வயதில் மூத்தவர்களிடம் பேசுகையில் அவர்கள் பேச்சு என் நேரத்தை விரயமாக்குவதாகப் பட்டிருக்கிறது. இன்று நான் மற்றவர்களிடம் பேசும் போது என்னிடம் மற்றவர்கள் அதையே உணர்வதை நான் உணர்கிறேன். இதைத் தான் நாம் "தலை முறை இடைவெளி" என்கிறோம்! இதைப் பற்றி நான் சுய பரிசீலனை செய்தபோது, எனக்கு புலப்பட்ட சில விஷயங்கள்:
  • வயது ஏற ஏற தேடல் அதிகமாகிறது. தேடலின் பரிசு அனுபவத்தின் அறிமுகமும் ஏட்டு ஞானமும்!
  • இந்த அரைகுறை ஞானம் தருவது "எனக்கு எல்லாம் தெரியும்" என்ற மமதை.
  • இதை மமதை என்று நாம் உணர்வதில்லை! மாறாக, நாம் பெற்ற சிறு ஞானம் மற்றவர் படும் கஷ்டத்தையும் தடுமாற்றத்தையும் நம்மை எளிதில் உணர வைப்பதால், அவர்களைத் திருத்தி அவர்களுக்கு வழிகாட்ட முற்படுகிறோம்.
  • நாம் யார் மற்றவருக்கு வழிகாட்ட? நமக்கு என்ன தகுதி இருக்கிறது? கிருஷ்ண பகவானே தன் உயிர் நண்பன் அர்ஜுனன் தன்னிடம் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் முழுமையாகச் சரணடைந்த பிறகே கீதா உபதேசம் செய்தார் என்று மகாபாரதம் சொல்கிறது. கடவுள் அவதாரமே தன்னிடம் மற்றவர் சரணடைந்த பிறகே உபதேசம் செய்யும் பொழுது அற்ப மானிடரான நாம் எம்மாத்திரம்?
  • மேலும் ஞானிகள் உபதேசம் செய்வதில் கூட சூட்சமமாகத்தான் சிலவற்றைத் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் பட்டுத் தெளிந்தால் தான் அனுபவம் வரும். சொல் புத்தி நம்மை ஆட்டு மந்தைபோல் மேய்ப்பவன் செல்லுமிடத்திற்குத்தான் செல்ல வைக்குமே தவிர, ஏன் செல்கிறோம் என்று புரியவைக்காது!
  • ஏதும் அறியாத நமக்கெதற்கு உபதேச ஆசை? மனிதன் பட்டுத்தான் தெளிய வேண்டும் என்ற நியதியை மாற்ற, தெளிவற்ற மனம் கொண்ட நாம் யார்?
என் வாழ்கையின் கஷ்டங்கள் கொடியவை என்று எண்ணிய எனக்கு, "இது கதை அல்ல, நிஜம்" (
http://www.techsatish.net/2010/05/gfdf.html) தொடரில் நான் பார்த்த "கானா" விஜி சொன்ன அவர் வாழ்ந்த வாழ்க்கையின் கதை, கடவுள் எனக்குக் கொடுத்திருக்கும் என் வாழ்க்கை சொர்க்கம் என்று புரிய வைத்தது. அதாவது நான் செல்லும் "பட்டுத் தெளியும்" பாதை, "பட்டுத் தெளிந்தவனின்" (கானா விஜியின்) சொல்லை நேர விரயம் என்று நினைக்க வைக்கவில்லை.

என் மனதில் தோன்றி வந்த "தலைமுறை இடைவெளி" குறைவதே, எனக்கும் மற்றவருக்கும் இடையே உள்ள "தலைமுறை இடைவெளி" அதிகமாவதன் காரணம்!

1 comment:

Gokula Krishnan said...

Nice perception... Keeping things short and sweet could be one of the solution as youngsters do not have the patience to hear in detail...